*தார் சாலைகள், குடிநீர், பாதாள சாக்கடை வசதிகள் -செய்த சாதனைகளைச் சொல்லி 52-வது வார்டில் அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பு*
திருச்சி 52-வது வார்டு பகுதிகளில் கழக முதன்மைச் செயலாளர், கே.என்.நேரு இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட மார்சிங் பேட்டை, போலீஸ் காலனி, பென்சனர் தெரு, மேலப்புதூர் மற்றும் கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்தார்.
வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பெண்கள் திரண்டு வந்து அமைச்சருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
குறிப்பாக பிரச்சாரத்தின் போது, அந்த வார்டில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்களிடம் எடுத்துரைத்தார். தரமான தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள்,
தடையில்லா குடிநீர் வசதி,சுகாதாரத்தைப் பேணும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகள்
உள்ளிட்ட வசதிகளைச் சுட்டிக்காட்டி, வரும் காலங்களிலும் இப்பகுதியின் வளர்ச்சி தொடர உதயசூரியன் சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அமைச்சர் சென்ற இடமெல்லாம் பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் திரண்டு வந்து அவரிடம் கோரிக்கைகளை முன்வைத்தும், செய்த பணிகளுக்கு நன்றி தெரிவித்தும் பேசினர்.
இந்த பிரச்சாரத்தின் போது மாநகர செயலாளர் மேயர் அன்பழகன்,கோட்டத் தலைவர் துர்கா தேவி, வட்டச் செயலாளர் மார்சிங் பேட்டை செல்வம் உள்ளிட்ட கழக தொண்டர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



No comments:
Post a Comment